5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் - டிடிவி தினகரன்

பிறப்பால் நான் ஒரு இந்து. தமிழ்நாட்டில் சனாதனம் என்று பேசி அது என்னவென்று தெரியாத என்னைபோன்றவர்களை அது குறித்து தெரிந்து கொள்ள ஆர்வத்தை உருவாக்குகிறார்கள்.

Oct 7, 2024 - 18:03
5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் - டிடிவி தினகரன்


சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூரில் அமமுக கட்சியின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கோபால் மற்றும் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் விவசாய கடன் தள்ளுபடி, கச்ச தீவை மீட்க வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சென்னையில் நடந்த சம்பவம் முதலமைச்சரின் கவன குறைவா, அவருக்கு தெரியவில்லை என்று கூறுவதா, காவல்துறை மீது குற்றம் சொல்வதா, இந்த விஞ்ஞான வளர்ச்சி அடைந்த நேரத்தில்  5 பேர்‌ உயிரிழந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு முதலமைச்சர் ஏற்க வேண்டும். 

முதலமைச்சர் அவரது குடும்பத்தினரை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை. 5 லட்சம் பேர் கூடுவார்கள் என்று தெரிந்தும் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னேற்பாடுகள் செய்யாதது அரசின் மிகப் பெரிய குறைப்பாடு. இதில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. நீங்கள் சரியாக அரசாங்கம் நடத்தவில்லை என்று கூறுவது அரசியல் கிடையாது.

இதே மகாமகம் நிகழ்வில் ஏற்பட்ட விபத்து குறித்து திமுக மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.அது அரசியல் இல்லையா? இவர்கள் செய்யும் தவறுகள், முறைகேடுகள் குறித்து சொன்னால் அரசியலா? என கேள்வி எழுப்பினார்.மேலும், இவ்வளவு  லட்சம் பேர் கூடும் இடத்தில் இதுபோன்று பிரச்சினை வரும் என்று முன்னேற்பாடுகள் செய்யாமல் இத்தனை உயிரிழப்புக்கு காரணமான அரசை விமர்சனம் செய்வதற்கு சாதாரண குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. மக்களின் ஆதரவோடு, கூட்டணி பலத்தோடு தீய சக்தி திமுகவை வீழ்த்துவோம். 

திமுகவுக்கு உதவியாக இருக்கின்ற B அணியாக இருக்கின்ற பழனிசாமியை சேர்த்து வீழ்த்துகின்ற காலம் 2026ல் வரும். நான் ஒரு இந்து. சனாதனம் என்றால் என்னவென்று தெரியாது. பிறப்பால் நான் ஒரு இந்து. எல்லா கடவுள்களையும் வழிபடுகிறேன். தேவையில்லாமல் தமிழ்நாட்டில் சனாதானம் - சனாதனம் என்று பேசி அது என்னவென்று தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வத்தை உருவாக்குகிறார்கள் என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow