"கலவர பூமியை புண்ணிய பூமியாக மாற்றியிருக்கிறோம்" - சொல்கிறார் பிரதமர் மோடி

"கலவர பூமியை புண்ணிய பூமியாக மாற்றியிருக்கிறோம்" - சொல்கிறார் பிரதமர் மோடி

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் இரட்டை எஞ்சின் ஆட்சியால், கடந்த 7 ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்து, மாநிலத்தின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், உலகின் முதல் கல்கி கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். கோயிலின் மாதிரியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உத்தரப் பிரதேசத்தில் மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக்கொண்டு நலத்திட்டப் பணிகளை செயல்படுத்தி வருவதாக கூறினார். அண்மையில் அயோத்தி நகரை சொர்க்க லோகம் போல மாற்றும் வகையில் மத்திய அரசு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன் உத்தரப் பிரதேசம் கலவர பூமியாக இருந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சியில் புண்ணிய பூமியாக மாறியிருக்கிறது.

இதனை தொடர்ந்து லக்னோ சென்ற பிரதமர்,  உத்தரப்பிரதேசத்தின் 4வது உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத்துக்கு மட்டும் ரூ.62,000 கோடியை உத்தரபிரதேச அரசு முதலீடுகளாக ஈர்த்து உள்ளது. நிகழ்ச்சியில் ரூ.10 லட்சம் கோடி செலவில் 14,000 திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் முக்கிய சுற்றுலா மையமாக உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். 

கடந்த 10 ஆண்டுகளில் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள், சுய உதவி குழுக்களில் இணைந்துள்ளதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சியின் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்து, வணிக கலாச்சாரம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow